Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சோனியாவுக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து: சீமான்

நவம்பர் 21, 2019 10:28

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விடுதலைப்புலிகளால் சோனியாகாந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது எனப் பாராளுமன்றத்தில் தி.மு.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஈழ இனப்படுகொலையில் நேரடியாகத் தொடர்புடைய கோத்தபய ராஜபக்சே இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் சூழலில் ஈழத்தமிழர்கள் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கி இருக்கிறார்கள். இந்த நேரத்தில் தி.மு.க.வின் பாரளுமன்ற குழுத்தலைவர் புலிகளால் ஆபத்து என்று பேசுவதால் ஈழத்தமிழர்கள், இன்னும் பல ஆண்டுகளுக்கு நசுக்கப்படும் சூழல் உருவாகப்போகிறது.

கோத்தபய ராஜபக்சே வெற்றிக்குப் பிறகு ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதைப்போன்று அறிக்கை வெளியிட்டத் தி.மு.க.வின் தலைமை டி.ஆர்.பாலுவின் இந்தப் பேச்சை ஏற்றுக்கொள்கிறதா? ஆமோதிக்கிறதா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். 2014-ம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் நெருங்கிய வேளையில் ஈழத்தமிழ் மக்களுக்குக் காங்கிரஸ் துரோகம் இழைத்துவிட்டதாகக் கூறி கூட்டணியை விட்டு வெளியேற நாடகமிட்ட தி.மு.க. இன்றைக்குக் காங்கிரசின் ஒட்டுண்ணியாக மாறி புலிகளைக் கொச்சைபடுத்துகிற வேலையில் இறங்கி இருக்கிறது. 

இனப்படுகொலை நடவடிக்கைக்குப் பக்கபலமாய் இருந்து வேடிக்கைப்பார்த்த வரலாற்றுத் துரோகத்தைச் செய்தது தி.மு.க. அத்தகையத் துரோக வரலாறு கொண்ட தி.மு.க. இன்றைக்கு புலிகள் பெயரில் அரசியல் செய்ய முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது. சிங்கள இனவாத கொடுமைகளுக்கு எதிராக நின்று தமிழினத்தின் காவல் அரணாக இருந்த விடுதலைப்புலிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் கருத்துகளைத் தெரிவித்த திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உடனடியாகத் தனது கருத்துகளைத் திரும்பப் பெற்று, மன்னிப்புக்கோர வேண்டும். இல்லாவிடில், தேர்தல் களத்தில் தக்கப்பாடம் புகட்டுவோம் என எச்சரிக்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்